கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் 8வது பிரதமராக முன்னாள் உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் நேற்று பதவியேற்றார். மலேசியாவில் 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் மகாதீர் முகமது, அன்வர் இப்ராகிமின் `நம்பிக்கை கூட்டணி’ வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி ஒப்பந்தப்படி முதல் 2 ஆண்டுகள் பிரதமர் பதவியை மகாதீர் வகித்தார். சமீபத்தில் அவருடைய 2 ஆண்டு பதவிக் காலம் முடிந்தது. அடுத்த 2 ஆண்டுகளுக்கான பிரதமர் பதவியை அன்வருக்கு அவர் விட்டு கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அன்வருக்கு பதவியை விட்டுக் கொடுக்க மனம் இல்லாத மகாதீர், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் எண்ணத்தில், கடந்த வாரம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதன் பிறகு, மகாதீரும், இப்ராகிமும் தனித்தனியே மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.