அம்பை: மணிமுத்தாறு அருவி சாலை பணி நிறைவடைந்ததையடுத்து 10 மாதங்களுக்குப்பின் இன்று மாலை முதல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தோட்டத்தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பக பகுதியில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. குற்றாலத்திற்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்வர். இதனிடையே அருவிக்கு செல்லும் 6.6 கிமீ தூரமுள்ள சாலை பல ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சிதலமடைந்து போனதால் சுற்றுலா பயணிகள் குளிக்க கூட செல்ல முடியாத நிலை உருவானது.இதையடுத்து ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருச்சி பொறியியல் வனக்கோட்டம் வாயிலாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாலை பணிக்கான ஜல்லி பரப்பி வைக்கப்பட்டது. ஆனால் சாலை பணிகளில் மந்தநிலை ஏற்பட்டதால் வனத்துறை, மனித உரிமை ஆணையம் கண்டிப்புக்கு ஆளானது.