பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடேஸ்வரா நியூ காலனியை சேர்ந்தவர் ரூபஸ் முல்லர் (48). இவருக்கு திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். குடிபோதைக்கு அடிமையான இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில், ரூபஸ் முல்லரின் குடும்ப சொத்தை, அவரது தம்பி போவாஸ் (43) என்பவர் விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரூபஸ் முல்லர் மதுபோதையில் தனது தம்பி போவாஸிடம் சென்று, சொத்து விற்றதில் தனது பங்கை கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போவாஸ், அண்ணன் ரூபஸ் முல்லரை கற்களால் சரமாரி தாக்கி, கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிய ரூபஸ் முல்லர் புளியந்தோப்பு புதிய பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார். போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் ரூபஸ் முல்லர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து போவாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.