இஸ்லாமாபாத்: அமெரிக்கா - தலிபான்கள் இடையே நாளை கத்தாரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கிறார். ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக, தலிபான்கள்- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் சாதகமான முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.