போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்க தடை விதிக்கும் சட்ட விதிகள் உள்ளதா? : வழக்கு தொடர்ந்தவர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா என்று வழக்கு தொடர்ந்தவருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரி கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அதில், சேலம் மாவட்டத்தில் பிப் 14ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் பங்கேற்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மனுதாரர் தரப்பு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.

Related Stories: