மதுரை: மதுரை ஆவினுக்கு தேர்தல் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, தேர்தல் நடைமுைற தொடங்கிவிட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்று கூறி தள்ளுபடி செய்தது.மதுரை மாவட்டம், சக்கரப்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மற்றும் தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மதுரை ஆவின் இயக்குநர்களாக நான் உள்ளிட்ட 17 பேர் கடந்த 15.12.2018ல் தேர்வு செய்யப்பட்டோம். 22.8.2019ல் மதுரையிலிருந்து தேனி மாவட்ட ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. இதனால், மதுரையிலிருந்த 6 இயக்குநர்கள் தேனி ஆவினுக்கு சென்று விட்டனர். இதன்பிறகு ஏற்கனவே தேர்வான 11 பேர் இயக்குநர்களாக பணியாற்றினோம்.மதுரை ஆவினுக்கு இயக்குநராக இல்லாத முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் என்பவரை, தேர்தல் நடத்தாமல் தலைவராக நியமித்தனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழரசன் நியமனம் செல்லாது என்பதால், தேர்தல் மூலம் நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், மதுரை உள்ளிட்ட 14 மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு இயக்குநர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை, மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மதுரை ஆவினில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 11 இயக்குநர்களின் பதவி காலம் 2023 வரை உள்ளது. இதன்பிறகு தான் இந்த இடங்களுக்கு தேர்தல் நடத்த முடியும்.விதிப்படி, காலியிடம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு மட்டும் தான் தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 11 இயக்குநர்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது சட்டவிரோதம். எனவே, மதுரை ஆவின் இயக்குநர்களுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், ஆவின் வக்கீல் மாரீஸ்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஐகோர்ட் உத்தரவுப்படி தான் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 7 ஆவின்கள் தற்போது 14 ஆவின்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் துவங்கிய பின் அதில், நீதிமன்றம் தலையிட முடியாது’’ என வாதிட்டனர். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம். துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் ‘‘தேர்தல் துவங்கிய பின் அது தொடர்பான நடவடிக்ைககளில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.