பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு

 

சென்னை: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 4000 பணியாளர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து), இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), முதல் நிலை வார்டர்கள் (பெண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 58 அலுவலர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி 2026 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம் மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப மற்றும் சிறப்பு பணிப் பதக்கம்’ வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: