சென்னை: பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். கடைசி நேர விற்பனையும் விறு விறுப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும், 2ம் நாள் மாட்டுப் பொங்கலும், தை மாதத்தின் 3வது நாள் காணும் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது.
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், பயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்” என உவகையுடன் கூறி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். எனவே சொந்த ஊரில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் நிலையானது உள்ளது. இதன் காரணமாக பண்டிகை கால விடுமுறை நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள்.
அதிலும் தொடர் விடுமுறை என்றால் ஒட்டுமொத்தமாக சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதையொட்டி பல லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அந்த வகையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல உதவிட சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்தில் மட்டும் கடந்த 4 நாட்களில் 6 லட்சத்து 90ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் விவரமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 4,390 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,01940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த, 9ம்தேதி முதல் 13ம்தேதி நள்ளிரவு வரை, மொத்தம் 15,762 பேருந்துகள் இயக்கப்பட்டு 6,90,720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை 2,73,152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, ரயில்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கினர். குறிப்பாக திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர். வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து, சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்கொண்டனர். அந்த வகையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரயில்களும் நிரம்பி வழிந்தன. நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த 5 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மேலும், ஆம்னி பேருந்துகளில் 3 லட்சம் பேரும், கார்கள், இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கானோரும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பொங்கலைக் கொண்டாட கடந்த 5 நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகள் வாயிலாக 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் சென்னையில் நேற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
இவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திங்கட்கிழமை காலை மீண்டும் சென்னை திரும்பும் வகையில் பேருந்து, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை கடை வீதிகளில் ஜவுளி, கரும்பு, மஞ்சள், பழங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. வட சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, அவர்களின் விருப்பத்தை கேட்டு புத்தாடைகளை வாங்கிச் சென்றனர்.
தி.நகர் உஸ்மான் சாலையில் பனகல் பூங்கா சந்தை, பாண்டிபஜார் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் புதிய ஆடைகளும், வீட்டுக்கு தேவையான, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்களையும் மக்கள் வாங்கி சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
