கெய்ரோ: எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கெய்ரோவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.எகிப்து நாட்டின் மெனோபியா மாகாணத்தில் கடந்த 1928ம் ஆண்டில் பிறந்த முபாரக், இளம் பருவத்திலேயே விமானப் படையில் சேர்ந்தார். கடந்த 1973ல் நடந்த அரபு-இஸ்ரேல் போரில் முக்கிய பங்காற்றினார். அதன் பிறகு, அதிபர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எகிப்தின் அதிபரானார். இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்து ராணுவத்திற்கு பல கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி கிடைத்த போதிலும், மின்பற்றாக்குறை, வேலையின்மை, ஏழ்மை, ஊழல் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன் மீதான ஊழல் புகார்களால், முப்பது ஆண்டுகளாக அதிபராக இருந்த முபாரக், கடந்த 2011 பிப்ரவரி மாதம், 18 நாள் போராட்டத்துக்கு பின்னர் மக்களின் வற்புறுத்தலினால் பதவி விலக நேரிட்டது. இந்த ஊழல் வழக்குகளில் இருந்து அவர் கடந்த 2017ல் விடுவிக்கப்பட்டார்.