திருச்சி: திருச்சி கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் நூதன தண்டனையால் அரசு மருத்துவமனையை மாணவர்கள் சுத்தம் செய்தனர். திருச்சி- மணப்பாறை சாலையில் தீரன் நகரில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு திருச்சி மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் ஒருசிலர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதியில் தங்கி படித்த இருதரப்பு மாணவர்களிடையே சீனியர் ஜூனியர் குறித்து மோதல் ஏற்பட்டது. கிரிக்கெட் பேட், ஸ்டம்புகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் கல்லூரி கேண்டீனில் இருந்த சோடா பாட்டில்களையும் எடுத்து வீசி மோதலில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 28 மாணவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் 28 பேரும், தாங்கள் சமாதானமாக செல்கிறோம். எங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியது. அதாவது ஒரு நாள், திருச்சி கிஆபெ அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டது.