சென்னை: கடலூர், நாகை மாவட்டங்களில் அமைய இருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 57,345 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்து இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த இத்திட்டங்கள் ரத்துசெய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இது பா.ம.க.வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டால் அதில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும்.