கலைஞர் போல் இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் அரணாக இருப்பார் : தயாநிதி மாறன் எம்.பி பேச்சு

சென்னை: இஸ்லாமிய மக்களுக்கு கலைஞர் போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அரணாக இருப்பார் என முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சென்னை மண்ணடியில் இஸ்லாமியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதிமாறன் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் மாமன், மச்சானாக உள்ளோம். இதில் பிரிவினை ஏற்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வருவதற்கு முக்கிய காரணம் அதிமுக, பாமக கட்சிகள் தான். மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்போது பாஜ அரசிற்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஆனால், அதிமுகவும், பாமகவினரும் ஆதரவாக வாக்களித்ததால் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். கலைஞர் இருந்தால் எப்படி உங்களுக்கு அரணாக இருப்பாரோ அதே போல் உங்களுக்கு மு.க.ஸ்டாலினும் இருப்பார். இந்த போராட்டத்தில் கலவரத்தை தூண்ட காவல்துறை முயலும். அமைதியாக இந்த போராட்டம் நடக்க வேண்டும். அதற்கு நீங்கள் கவனமாக செயல்படுங்கள். எங்களுடைய ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு. இவ்வாறு பேசினார். உடன் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு எம்.எல்.ஏ மற்றும் திமுகவினர் இருந்தனர்.

Related Stories: