நாகர்கோவிலில் கேரள இளம்பெண்களை அழைத்து வந்து மசாஜ் சென்டர்களில் ரகசிய அறைகள் அமைத்து செக்ஸ்: மாணவர்கள், இளைஞர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இயங்கும் சில மசாஜ் சென்டர்களில் மீண்டும் விபசாரம் தொடங்கி உள்ளது. கேரள இளம் பெண்களை காட்டி கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது ஏராளமான மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு சிகிச்சைகள் என்ற பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள மசாஜ் சென்டர்கள் சிலவற்றில் கேரளா, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட வெளி மாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.  இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி சில மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தனர். அதன் உரிமையாளர்கள், பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மசாஜ் சென்டர்களில் விபசாரத்தில் இருந்த இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகு மசாஜ் சென்டர்கள் மீது காவல்துறையின் கண்காணிப்பு குறைந்தது.

இதனால் தற்போது மீண்டும் புதிது புதிதாக மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மசாஜ் சென்டர்கள் மூடப்பட்ட இடங்களில் வேறு பெயர்களில் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கி வரும் மசாஜ் சென்டர்கள் சிலவற்றில் மீண்டும் விபசாரம் அரங்கேறி வருகிறது. இளம்பெண்களின் ஆபாச படங்களுடன் ஆன்லைனில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். இவ்வாறு ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து அந்த மசாஜ் சென்டர்களுக்கு ஏராளமான வாலிபர்கள், மாணவர்கள் செல்கிறார்கள். அவர்களுக்கு இளம்பெண்களை மசாஜ் செய்ய வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கப்படுகிறது. மருத்துவ ரீதியான மசாஜ் சென்டர்கள் இயங்க பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இவற்றை மீறி, மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது.

குறிப்பாக தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. அந்த வகையில் நாகர்கோவிலில் தற்போது அதிகளவில் மசாஜ் சென்டர்கள் அதிகரித்து உள்ளன. இவற்றில் சில மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற மசாஜ் சென்டர்களில் போலீசார் வருகிறார்களா? என்பதை கண்காணிக்க நுழைவு வாயில், மாடி என பல்வேறு இடங்களில் கேமராக்களை பொருத்தி உள்ளனர். போலீசார் உள்ளே வருகிறார்கள் என்பது தெரிந்ததும், ஏற்கனவே தயார் செய்துள்ள ரகசிய அறைகளில் இளம்பெண்கள், வாலிபர்களை பதுக்கி வைத்து கொள்கிறார்கள். இதனால் போலீசார் சோதனைக்கு சென்றாலும் எதுவும் சிக்குவதில்லை. இது தவிர சில மசாஜ் சென்டர்களை போலீசார் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள். இதற்காக மாதந்தோறும் மாமூலும் வாங்கி கொள்கிறார்கள்.

இதனால் அது போன்ற மசாஜ் சென்டர்கள் இளம்பெண்களை காட்டி பணம் பறிக்கும் கூடமாகவே உள்ளன. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படைகள் நியமித்து, உடனடியாக மசாஜ் சென்டர்களை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: