புதுடெல்லி: தனியார் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது கடந்த 10 ஆண்டுகளில் 57 சதவீதம் சரிந்துள்ளது ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டப்பணிகள் கிடப்பில் உள்ளன. அதோடு, பொருளாதார மந்தநிலை காரணமாக புதிய முதலீடுகளும் பெருகவில்லை. முதலீடுகள் மற்றும் திட்டங்களின் நிதி தேவைகளை வங்கிகள்தான் பெரும்பாலும் பூர்த்தி செய்கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகள் திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. கடந்த 2009-10 நிதியாண்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் சுமார் ₹4 லட்சம் கோடி. இது கடந்த 2018-19 நிதியாண்டில் 1.76 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. 2014-15 நிதியாண்டில் வங்கிகள் தனியார் நிறுவனங்களின் திட்ட முதலீடுகளுக்கு வழங்கிய கடன் ₹87,253 கோடி மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக குறைந்த பட்ச அளவாக கருதப்படுகிறது.