இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் உணர்வு அனைவருக்கும் தெரியும்: தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ- ஜீவன்ஜேக்கப் மகன் டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ், சேலம் கிருபா மருத்துவமனை டாக்டர் பிராங்க்கிருபா-பூர்ணிமா பிராங்க் மகள் டாக்டர் கீர்த்தனா பிராங்க் கிருபா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, தூத்துக்குடியில் நேற்று மாலை நடந்தது. விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் பங்கேற்றார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது நன்கு தெரியும் என்பதால் நான் அரசியல் பேச விரும்பவில்லை.

அதே நேரத்தில் இன்றைக்கு மத்தியிலும், மாநிலத்திலும் எந்த உணர்வோடு ஆட்சி நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் இன்று மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. அதற்கான காரணம் உங்களுக்கு தெரியும். எனவே வரக்கூடிய காலங்களில் உங்களுக்கு பாடுபடக்கூடியவர், உங்களுக்காக பணியாற்றக் கூடியவர், உங்களுடைய பிரச்னைகளை சிந்திக்கக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.  இவ்வாறு ஸ்டாலின் பேசினார். முன்னதாக கீதாஜீவன் எம்எல்ஏ வரவேற்றார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: