பாதுகாப்பு கோரி முக்கூடல் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

பாப்பாக்குடி:  முக்கூடல் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி மணக்கோலத்தில்் நேற்று தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முக்கூடல் தியாகராஜர் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் முத்துராஜ் (25). பாளையங்கோட்டையில் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்த இவருக்கும், சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகளும், ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்து வந்த கார்த்திகா (20) என்ற இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.

இதற்கு கார்த்திகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், முக்கூடலுக்கு நேற்று காலை வந்த காதலர்கள் இருவரும் வடக்கு கருப்பசாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கோரி மணக்கோலத்தில் முக்கூடல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்திய எஸ்ஐ செல்வராஜ், பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், மாலை வரை வராததால் முத்துராஜ் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். காதலர் தினத்தை காதலர்கள் பலரும் கொண்டாட ஆயத்தமான நிலையில் முக்கூடல் காவல் நிலையத்தில் காதல் ஜோடி மணக்கோலத்தில்் நேற்று தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: