ஆரணி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீர் சாவு: நர்ஸ் மீது பெற்றோர் புகார்

ஆரணி: ஆரணி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட 6 மாத குழந்தை திடீரென இறந்தது. ஊசி போட்ட நர்ஸ் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த நெசல் அருகே விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி, டிரைவர். இவரது மனைவி தமிழரசி. இவர்களது 6 மாத குழந்தை லித்தேசுக்கு நெசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டனர். இரவு பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை லித்தேஷ், நேற்று காலை 6.30 மணியளவில் மயங்கிய நிலையில் இருந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை லித்தேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தந்தை சிரஞ்சீவி மற்றும் அவரது உறவினர்கள், நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். காலை 9.30 மணியளவில் அங்கு வந்த டாக்டர்களிடம், நர்ஸ் செந்தமிழ்ச்செல்வி முறையாக பரிசோதனை செய்யாமல் தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை இறந்ததாக கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி தாலுகா போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், நர்ஸ் செந்தமிழ்ச்செல்வி மீது நடவடிக்கை எடுக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு 5ம் தேதியே தடுப்பூசி போடுவதற்கு கொண்டு சென்றபோது, சளி இருப்பதாக கூறி நர்ஸ் தடுப்பூசி போடமுடியாது என திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: