ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதி கிராமத்தில் உள்ள அக்னி ஆற்றின் குறுக்கே தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பாக சுமார் ஏழரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை விவசாயிகளுக்கு பலனளிக்காமல் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய கோரியும் சமூகநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தஞ்சை கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் ஒன்றிய பகுதியை சேர்ந்த நெய்வேலி வடபாதி அக்னி ஆற்றின் குறுக்கே சுமார் ஏழரை கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த அணையானது நெய்வேலி வடபாதி கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும், நெய்வேலி வடபாதி பெரிய ஏரி, நெய்வேலி தென்பாதி கினியகுளம் ஆகியவை பாசன வசதி பெற வேண்டும் என்பது தமிழக அரசின் குறிக்கோளாக இருந்தது. நெய்வேலி பெரிய ஏரி 15 ஏக்கர் பரப்பளவும் 150 ஏக்கர் பாசன பகுதியாகவும் உள்ளது.