புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சார்பில் பட்டதாரி மாணவர்களுக்கு ‘இன்டர்ன்ஷிப்’ எனப்படும் பயிற்சி அளிக்க வரும் 21ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து புலனாய்வு செய்யும் பணியில் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு இன்டர்ன்ஷிப் எனப்படும் பயிற்சி திட்டத்தை இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி திட்டத்தில் சேர பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பல்கலைக் கழகங்களில் பதிவு செய்துள்ள ஆராய்ச்சி மாணவர்கள், சட்ட மாணவர்கள், சைபர், டேட்டா அனலிசிஸ், குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல் மற்றும் தடயவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை, மும்பை, டெல்லி ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ சண்டிகர் ஆகிய இடங்களில் உள்ள சிபிஐ அலுவலகங்களில் மொத்தம் 30 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.