தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 9 மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், 27 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக தேர்தல் நடந்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது.

இதுதொடர்பாக 2 முறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்படி 9 மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அதுதொடர்பான அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசைன நடத்தினார்

Related Stories: