ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பரம்போராவில் உள்ள ஷெல்டெங் சோதனைச் சாவடியில் சிஆர்பிஎப் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை ரஞ்சன் (31) என்ற போலீஸ்காரர் சந்தேகத்தின் பேரில் தடுத்து சோதனை செய்ய முயன்றார். அப்போது, பைக்கில் வந்தவர்கள் திடீரென போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் தீவிரவாதிகள் என்று தெரிந்ததும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையின் போது ரஞ்சன் மிகவும் ்அருகில் இருந்து தாக்குதல் நடத்தினார். அப்போது, தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டு அவருடைய தலையை துளைத்தது. இருப்பினும், ரஞ்சன் தனது ஒரு இயந்திர துப்பாக்கியாலும், கைத்துப்பாக்கியாலும் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவன் காயத்துடன் சிக்கினான். ரஞ்சன் வீரமரணம் அடைந்தார். இவருடைய வீரத்தை கண்டு, சக வீரர்கள் வியந்தனர். அவருடைய உடலுக்கு அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர். அவருடைய உடல் தனி விமானம் டெல்லி கொண்டு வரப்பட்டு, இன்று பீகாரில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.