சென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சவாடிகளில், பாஸ்டேக் மூலம் இருமார்க்க பயணத்திற்கு கட்டணம் செலுத்தும் போது, கட்டணச் சலுகை வழங்கி, கடந்த ஜனவரி 15ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுற்றறிக்கை பிறப்பித்தது. சுங்க சாவடிகளில் கட்டணத்தை ரொக்க பணமாக செலுத்தி செல்பவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டதாக கூறி, ஈரோட்டை சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே பாஸ்டேக் நடைமுறை தொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதால் மக்கள், சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தி செல்கிறார்கள். இந்த நிலையில், பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவது பாரபட்சமானது. எனவே, நெடுஞ்சாலை துறை சுற்றிறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றறிக்கையை ரத்து செய்து, ரொக்க பணம் கொடுத்து செல்பவர்களுக்கும் கட்டண சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.