நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாலிபரின் பைக் திருட்டு

சென்னை: மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் காதலியோடு பேசி கொண்டிருந்த வாலிபரின் பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் அருகே நாகேஸ்வர ராவ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் அதிகளவில் காதல் ஜோடிகளும் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது காதலியுடன் நாகேஸ்வரராவ் பூங்காவிற்கு பைக்கில் வந்தார். அப்போது தங்களுடைய செல்போன் மற்றும் மணிபர்சை பைக்கில் பெட்டிக்குள் வைத்துவிட்டு பூங்காவிற்குள் சென்று விட்டனர்.

பின்னர் வெகுநேரம் கழித்து இரவு வீட்டிற்கு செல்வதற்காக வெளியில் வந்து பார்த்த போது தாங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் பைக் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் காதல் ஜோடி புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, பூங்கா அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிவிடி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மயிலாப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: