கொழும்பு: `இலங்கையில் தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் அமைப்புகள் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம்’ என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அதன் பின்னர், அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் 72வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது தலைநகர் கொழும்புவில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது: இலங்கை மக்களின் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் எந்த அமைப்புகளும் நாட்டில் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த வடக்கு, தெற்கு பிரச்னையால் நாட்டின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.