கொழும்பு; இலங்கையில் இன்று நடைபெறும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பு சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இரு மொழிகளில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்பட்டது. இடையில் தமிழில் பாடுவது நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது. `நமோ நமோ மாதா’ என்ற சிங்கள மொழி பாடல் இந்த நாட்டின் தேசிய கீதமாக பாடப்பட்டு வருகிறது. இதை `லங்கா தாயே’ என தொடங்கும் வகையில் தமிழில் தேசிய கீதமாக மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது. இலங்கையில், கடந்த நவம்பரில் அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய புத்தமதத்தை பின்பற்றும் சிங்களர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.