சென்னை: டெல்லி மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டிபி.ஐ.கட்சி மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 30ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் டெல்லி ஜாமிஆ பல்கலைக்கழக மாணவர்கள், அமைதி பேரணி நடத்தத் திட்டமிட்டனர். இந்த நிலையில், மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் சதாப் படுகாயம் அடைந்துள்ளார். இந்த தாக்குதல் பாஜக தலைவர்களின் தூண்டுதலில், டெல்லி காவல்துறையின் முழு பாதுகாப்புடனும் ஆதரவுடனும் நடந்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.