லாகூர்: பாகிஸ்தானில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதை தொடர்ந்து அங்கு தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த காப்பான் திரைப்படத்தில், வில்லன் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை உற்பத்தி செய்து விளைநிலத்தில் கொண்டு வந்துவிட்டு பயிர்களை அழிக்கச் செய்யும் காட்சி இடம்பெறும். இதுபோன்ற காட்சிகள் கற்பனையானவைதான் என நினைத்துக்கொண்டிருந்த நிலையில் அதுபோன்ற உண்மை சம்பவம் அரங்கேறி வருகின்றது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் சில மணி நேரங்களில் மொத்தமாக கோதுமை பயிர்களை அழித்து நாசம் செய்து விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்தன. சில வாரங்கள் பஞ்சாப்பில் முகாமிட்டு பயிர்களை அழித்த வெட்டுக்கிளிகள் தற்போது மீண்டும் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளன. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன.