சென்னை: சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளை பதிவிட்டு, அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதுபோன்று சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லை. இதுபோன்று அவதூறுகளை பரப்பி, கேவலமான புகழ் தேடுபவர்களை கிள்ளி எறிய வேண்டும். சமூக நல்லொழுக்கம் மற்றும் நல்லிணக்கத்தை காத்திட நீதித்துறைக்கு இதுவே சரியான நேரம்.