டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி பாஜ, அதிமுக அரசை கண்டித்து 28ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: தொண்டர்கள், விவசாயிகள், மாணவர்கள், சமூகஆர்வலர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெறவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் விரோத பாஜ, அதிமுக அரசுகளை கண்டித்து திமுக சார்பில் வரும் ஜனவரி 28ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் தொண்டர்கள், விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு  மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விவசாயிகள் - பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் மத்திய பாஜ அரசு 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகியவை தேவையில்லை என்று கடந்த 16ம் தேதி அறிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மாபெரும் துரோகமாக திமுக இதை கருதுகிறது. மத்திய பாஜ அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், அவரது அமைச்சரவையிலேயே இருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் “அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எல்லாம் நடத்த தேவையில்லை” என்று இன்னொரு புறம் மத்திய அரசுக்கு நேரெதிரே கடிதம் எழுதி கோரிக்கை வைப்பதுமாக, விவசாயிகளை ஏமாற்றும் ஒரே நோக்கத்துடன் ஒரு கபட நாடகத்தை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தடுத்து நிறுத்திட முயலாமல், அதிமுக அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறது. எவ்வித அனுமதியும் பெறாமல், சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு உட்படாமல் இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசும், இப்படி சர்வாதிகாரமாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, விவசாய நிலங்களை அழித்து நிறைவேற்றிட எண்ணியதில்லை. ஆனால் தமிழக உரிமைகளுக்கும், விவசாயிகளின் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய பாஜ அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறது.

எனவே, மத்திய பாஜ அரசு மற்றும் மாநில அதிமுக அரசின் விவசாயிகள், வெகுமக்கள் விரோத செயல்களை கண்டித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு “சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை” என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும் வரும் 28ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில், தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் விவசாயிகள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெருமளவில் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

Related Stories: