பள்ளிக்கரணையில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி

வேளச்சேரி: பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாமி கும்பிட்டபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார். பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (80). கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் சாமி கும்பிட்டார்.  அப்போது பூஜை  விளக்கில் இருந்த தீ எதிர்பாராத விதமாக சேலையில் பற்றி மளமளவென பரவி  உடலிலும் பற்றியது.

இதனால் வலி தாங்காமல் கதறினார். மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து, உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் நேற்று இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்தம்மாள் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: