சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடத்த தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் 21 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது இதற்கான திருப்பணிகள் தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த விழாவில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை நடத்த உயர் மட்டக்குழு அமைத்து அறநிலையத்துறை செயலாளர் அசோக் டோங்ரே உத்தரவிட்டுள்ளார்.