இலங்கை ஆயுதம் வாங்க இந்தியா ரூ.355 கோடி உதவி: அஜித் தோவல் உறுதி

கொழும்பு: இலங்கை சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் வாங்க, இந்தியா ரூ.355 கோடி நிதியுதவி அளிக்கும் என உறுதியளித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றபின், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு சென்று கோத்தபயவை சந்தித்து பேசினார். அதிபராக பதவியேற்ற பின் தனது முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய இந்தியா வந்தார். தற்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்று, கோத்தபயவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது, உளவு தகல்களை பகிர்ந்து கொள்வது, கடல்சார் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர். மேலும், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பங்களை வழங்குவதாகவும் இந்தியா உறுதி அளித்தது.

 

இந்த சந்திப்பு பற்றி இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,  ‘இலங்கை ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.355 கோடி நிதியுதவி அளிப்பதாக அஜித் தோவல் உறுதி அளித்துள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அஜித் தோவலுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடந்தது. தேசிய பாதுகாப்பில் இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், கடல்சார் மற்றும் மண்டல ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தினோம்,’ என கூறியுள்ளார்.

Related Stories: