சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் காரை துரத்திய காட்டு யானை: பயணிகள் தப்பினர்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சென்ற காரை காட்டு யானை துரத்தி முன்பக்க கண்ணாடியை உடைத்தது. பயணிகள் பீதியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கோவை செல்வதற்காக காரில் 5க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

ஆசனூர் அருகே வனச்சாலையில் கார் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை, சாலையின் நடுவே வந்து காரை துரத்தியது. இதைக்கண்ட கார் ஓட்டுநர் காரை பின்னோக்கி நகர்த்தினார். இருப்பினும் யானை விடாமல் துரத்தி வந்து காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தது. காரில் இருந்தவர்கள் பீதியடைந்தனர். அப்போது காரின் முன், பின்னாக வந்த வாகனங்களால் அச்சமடைந்த யானை அங்கிருந்து விலகி சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் புகுந்தது. இதனால் காரிலிருந்த பயணிகள் தப்பினர்.

Related Stories: