திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் 27 லட்சம் மோசடி: வாலிபர் கைது

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் 27 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் ராஜசிம்மன். (46). இவர் தனியார் வெப்சைட் ஒன்றில், திருமணம் செய்து கொள்ள பெண் தேவை என்று விளம்பரம் கொடுத்தார். இந்த விளம்பரத்தை ஐதராபாத்தை சேர்ந்த உமாராணி (42) என்பவர் பார்த்து வெப்சைட்டில் கொடுத்திருந்த முகவரி மற்றும் செல்போன் எண்ணை வைத்து ராஜசிம்மன் பேசியுள்ளார். இதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணிடம் இருந்து ரூ.27 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவந்ததாக தெரிகிறது. இதனால் அவரது செல்போனுக்கு பெண் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் உமராணி அதிர்ச்சி அடைந்தார்.இதுபற்றி ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் உமாராணி புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ராஜசிம்மனை தேடியபோது அவர் திருச்சியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருச்சிக்கு சென்று ராஜசிம்மனை கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதுபோல் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: