ஷேர் ஆட்டோவில் முன் சீட்டில் இருந்த பெண்ணின் முடியை வெட்டிய இளைஞர்

சென்னை: நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது தோழியை சந்திப்பதற்காக ஷேர் ஆட்டோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்தார். அவர், ஷேர் ஆட்டோவின் முன்பகுதி இருக்கையில் அமர்ந்திருந்தார். பூந்தமல்லி சாலை என்எஸ்கே நகர் அருகே ஆட்டோ சென்று கொண்டிருக்கும்போது திடீரென அவரது முடியை யாரோ தொட்டதுபோல் உணர்ந்தார். இதையடுத்து, முடியை தொட்டு பார்த்தபோது முடியின் வால்பகுதியை பின்னால் இருந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வெட்டியது தெரியவந்தது. முடியை இழந்த பெண் கூச்சலிடவே அந்த இளைஞர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். அவரை ஆட்டோவில் இருந்த ஆண்கள் சிலர் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில், அந்த இளைஞர் பெயர் கார்த்திக் என்றும் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரது கையில் 2 கத்திரி கோல்களும், ஸ்டேபிளர், பேப்பர் கிளிப்புகளும் இருந்தன. முடியை இழந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. எனவே, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார். தனது முடியை வெட்டிய இளைஞர் மீது புகார் கொடுக்கவும் மறுத்துவிட்டார். அந்த இளைஞர் மீது இதற்கு முன் எந்த வழக்கும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: