தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி 1000 கலைஞர்கள் இசை அஞ்சலி

திருவையாறு: திருவையாறு தியாகராஜர் ஆராதனை நிறைவு விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இசை அஞ்சலி  செலுத்தினர்.தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் 173வது ஆராதனை விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையா  நாயுடு துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து தினம்தோறும் இசைநிகழ்ச்சி நடந்தது.நிறைவு நாளான நேற்றுமுன்தினம் காலை 8.30 மணிக்கு மங்கள  இசை நடந்தது. அதைத்தொடர்ந்து 9மணிக்கு விழா பந்தலில் சுதா ரகுநாதன், மஹாநதி சேபானா மற்றும் ஆயிரக்கணக்கான கர்நாடக  இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து தியாகராஜர் சிலை ஊர்வலமாக உஞ்சவர்த்தனி பஜனையுடன் புறப்பட்டு விழா பந்தலை  அடைந்தது. அப்போது சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து இசை நிகழ்ச்சி நடந்தது.இரவு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில்  தியாகராஜர் வீதியுலா காட்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைந்தது.விழா ஏற்பாடுகளை சபா தலைவர்  ஜி.கே.வாசன் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் சபா நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை எஸ்பி மகேஸ்வரன்  உத்தரவின்பேரில் திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: