ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 2 லட்சம் குட்கா காருடன் பறிமுதல்: இருவர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ₹2 லட்சம் மதிப்புள்ள குட்காவை  போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அடுத்த ஒரகடம் போலீசார், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில், 21 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது, அதில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 2 வாலிபர்களை, கார் மற்றும் குட்கா பொருட்களுடன் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அவர்கள் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த ஜிடி நல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (29), அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பாலமுருகன் (25) என தெரிந்தது. 2 பேரும் குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களுடன் யாருக்கு தொடர்பு உள்ளது. எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. சென்னையில் எங்கு பதுக்கி வைக்கிறார்கள் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: