கொடிக்கம்பம் ஊன்றும்போது பரிதாபம் அதிமுக பிரமுகர் மனைவி மின்சாரம் தாக்கி பலி

குஜிலியம்பாறை, ஜன. 17: கொடிக்கம்பம் ஊன்றும்போது அதிமுக பிரமுகர் மனைவி மின்சாரம் தாக்கி பலியானார்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ராமகிரியை சேர்ந்தவர் வடிவேல் (50). ராமகிரி 15வது வார்டு அதிமுக கிளை செயலாளர். இவரது மனைவி திலகவதி (46). குஜிலியம்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர். நேற்று ராமகிரியில் நடக்கவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில், அதிமுக கட்சிக்கொடியை ஏற்றுவதற்காக அங்கிருந்த கொடி கம்பத்தை பிடுங்கி பெயின்ட் அடித்து புதுப்பித்துள்ளார் வடிவேல்.

பின்னர் நேற்று முன்தினம் மாலை வடிவேல், திலகவதி, இவர்களது மகள் நாகேஸ்வரி (26) ஆகியோர் சேர்ந்து அதிமுக கொடிக்கம்பத்தை அதே இடத்தில் ஊன்றியுள்ளனர். அப்போது அருகேயுள்ள உயரழுத்த மின்கம்பி மீது கொடி மரம் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்தபோது திலகவதி இறந்து விட்டது தெரிந்தது. வடிவேல், நாகேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: