புதுடெல்லி: குடியுரிமை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தியதால் கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யாத டெல்லி போலீசாரிடம் பெண் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். டெல்லியில் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை கடந்த மாதம் 20ம் தேதி தடையை மீறி பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேரணி நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், ஆசாத்துக்கு எதிராக போலீஸ் எப்ஐஆரில் தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, டெல்லி போலீசாரிடம் நீதிபதி கடுமையாக கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லாததால்தான் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். நம் எண்ணங்களை வெளிப்படுத்த நமக்கு முழு உரிமை உண்டு. ஜும்மா மசூதி ஏதோ பாகிஸ்தானில் இருப்பதை போல போலீசார் நடந்து கொள்கிறார்கள். அப்படியே அது பாகிஸ்தானில் இருந்தாலும் அங்கு சென்றும் போராட்டம் நடத்தலாம். ஏனென்றால் பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததுதான் பாகிஸ்தான்.