விஜயவாடா : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில அரசு அறிவித்துள்ள மூன்று தலைநகர் அறிவிப்பைக் கண்டித்து இந்த ஆண்டு சங்கராந்தி பொங்கல் பண்டிகையை கொண்டாட போவதில்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள பேன்ஸ் சந்திப்பில் இன்று அதிகாலை முன்று தலைநகருக்கு எதிர்ப்பு தெரிவித்து போகித் தீ மூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு பேசுகையில் மூன்று தலைநகர் அறிவிப்பை இந்த அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் இந்த அரசை கலைத்துவிட்டு ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் அந்த தேர்தலில் மீண்டும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் நான் அரசியலைவிட்டு விலகிகிறேன் என்று சவால் விடுத்தார்.
கர்னூலில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று முதலில் கூறியது நான். ஜாதி , மதம் பிராந்தியங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த மாநில அரசு முயற்சி செய்து வருகின்றனர். உலகில் எங்குமில்லாத ஆலோசனை 3 தலைநகர் ஆலோசனை எனவே தங்களுக்கு ஒரு தலைநகர் மட்டும் போதும் என ஆந்திர மக்கள் விரும்புகின்றனர்.
மூன்று தலைநகர் என்பது பைத்தியக்காரத்தனம் என்று ஒரு அமைச்சரே கூறுகிறார். மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களில் ஒருவர் கூட தென்படவில்லை அமைச்சர்கள் மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டும் சேவல் சண்டையில் பங்கேற்று வருகின்றனர். பெண்களுக்கு கௌரவம் அளிப்பது குறித்து போலீசார் கற்றுக்கொள்ள வேண்டும். அமராவதி தலைநகருக்கான போராட்டத்திற்கு போலீசார் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் பேசினார்.