எக்ஸ்கியூஸ் மீ... என்கிட்ட குண்டு இருக்கு விமானிகளை அதிரவைத்த பெண் பயணி

கொல்கத்தா: உடலில் வெடிகுண்டு கட்டி வந்துள்ளதாக கூறி மிரட்டிய பெண் பயணியை கொல்கத்தா போலீசார் கைது செய்துளள்னர். கொல்கத்தாவில் மும்பை நோக்கி ஏர்ஏசியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அது வானத்தில் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில், விமானத்தில்  இருந்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்ணை அழைத்து, விமானியிடம் கொடுக்குமாறு ஒரு கடிதத்தை கொடுத்தார். அதில் இருந்ததை படித்து பார்த்த பணிப்பெண் அதிர்ந்தார். ‘உடலில் வெடிகுண்டை கட்டி வந்துள்ளேன். இன்னும் சிறிது நேரத்தில் அதை வெடிக்கச் செய்ய போகிறேன்,’ என்று அதில் எழுதியிருந்தது.

உடனடியாக அந்த பணிப்பெண், விமானியிடம் சென்று கடிதத்தை கொடுத்தார். இதனால், விமானி உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, விமானத்தை உடனடியாக கொல்கத்தாவிற்கே திருப்பி தரையிறக்குமாறு உத்தரவிடப்பட்டது. விமானியும் மிக விரைவாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கிய உடன் அதிரடிப்படையினர் விரைந்து விமானத்தில் வந்து அந்த பெண் பயணியை சோதித்தனர். ஆனால், அவரது உடலில் குண்டுகள் எதுவும் இல்லை. அவரை மட்டும் விமானத்தில் இருந்து இறக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் எதற்காக போலியாக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: