திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம் மற்றும் உற்சவங்கள் இந்து தர்ம பிரசாரத்திற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 7ம்தேதி வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் தலைவர் ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம்.அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்ற பிறகு தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவிராஜ், வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தனக்கு வேண்டியவர்கள் 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, 30 பேரை கடந்த டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவருடன் பிரித்திவிராஜ் பணியில் இருந்தபோது பேசிய ஆடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.