மதுரை: மாநகராட்சி வார்டு மறு சீரமைப்பை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பி.பழனிவேல் தியாகராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மதுரை இரண்டாவது பெரிய மாநகராட்சி. இங்கு தற்போது 4 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி வார்டுகள் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகளவு குளறுபடிகள் உள்ளன. எனவே, தற்போது வெளியிடப்பட்ட வார்டு சீரமைப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றி முறையாக வார்டு மறுசீரமைப்பு செய்யவும், அதன் பிறகே மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.