விருத்தாச்சலம், சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றியை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் பிஎஸ்பி வேட்பாளர்கள் தொடர்ந்துள்ளனர்

சென்னை: விருத்தாச்சலம் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றியை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த  ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசல பஞ்சாயத்திலும், திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் பஞ்சாயத்திலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரு ஒன்றியங்களிலும் அதிமுக  வேட்பாளர்கள் வெற்றியை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அய்யாசாமி, கிரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கிரி தனது மனுவில், சோழவரம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான  தேர்தலில் 1883 வாக்குகள் பெற்ற நிலையில், தன்னை விட குறைவாக 1642 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் பாஸ்கர்   வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதேபோல், விருதாச்சலத்தில் 1193 வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்காமல், 1140 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் செல்லதுரை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக அய்யாசாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.  எனவே, இந்த இரு இடங்களிலும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். முறைகேடாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் மறைமுக தேர்தலில் பங்கேற்க தடை விதிக்க  வேண்டும் என்று கோரியுள்ளனர்.  இந்த வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: