ஜேஎன்யூ வன்முறை சம்பவம் குஜராத்தில் காங். - பாஜ மாணவர் அமைப்பு மோதல்: 10 பேர் காயம்

அகமதாபாத்:  டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் மீது மர்மநபர்கள் கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடத்தியதை கண்டித்து குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பாஜ ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அலுவலகம் அருகே இந்திய தேசிய மாணவர்  சங்கத்தினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இந்நிலையில், அங்கு வந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை  சேர்ந்தவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த  போலீசார் அங்கு விரைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

Related Stories: