வாரத்தில் 4 நாட்கள் வேலை; 6 மணி நேரம் பணி: புதிய நடைமுறை அமல்படுத்த பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் திட்டம்

ஹெல்சின்கி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார். உலகின் இளம்பிரதமர் என்ற பெருமையை பெற்ற பின்லாந்து பிரதமர் சன்னா மாரின், நாட்டின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், வேலை நாட்களை குறைப்பது மட்டுமின்றி, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த மாற்றம் கலை, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஊழியர்கள் நேரம் செலவிட வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என ஒருப்பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் பணியாளர்களால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என ஆதரவும் எழுந்துள்ளது.இதனிடையே பின்லாந்து நாட்டில் ஏற்கனவே 1996 இன் வேலை நேர ஒப்பந்தம் அமலில் உள்ளது. இது தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 3 மணி நேரத்திற்கு முன்னதாகவோ, 3 மணி நேரம் களைத்து தொடங்கி குறிப்பிட்ட மணி நேரங்கள் வேலை செய்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

பின்லாந்து நாட்டின் அண்டை நாடான சுவீடன் 6 மணி நேர வேலை நாட்களை செயல்படுத்துவதன் மூலம் ஊக்கமளிக்கும் முடிவுகளை காட்டியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்வீடிஷ் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கூட அதிக திருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: