சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் விதியை மீறிய வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பெரம்பூர் தொகுதி வேட்பாளராக அப்போதைய அதிமுக வட சென்னை வடக்கு மாவட்ட செயலராக இருந்த, வெற்றிவேல் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் விதியை மீறியதாக வெற்றிவேல் மீது கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஜெயபால் என்பவர் புகார் அளித்தார். வெற்றிவேல் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.