தண்டையார்பேட்டை: அறநிலைய துறைக்கு சொந்தமான கோயிலில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கோயில் கணக்காளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூக்கடை தங்கசாலை பள்ளியப்பன் தெருவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15 பேர் வேலை பார்க்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி (52) உள்ளார். இக்கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, விசேஷமான பண்டிகை தினங்களில் ஒரு மாத சம்பளம் ஊக்க தொகையாக வழங்கப்படுவது வழக்கம். இதனை, இங்கு கணக்காளராக பணிபுரியும் பொன்னேரி என்ஜிஓ நகர் பால விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகர் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளார்.