சாலையே தெரியாத அளவில் உலர்களமாக மாறி வரும் கமுதி-சாயல்குடி ரோடு: வாகன ஓட்டிகள் அவதி

கமுதி: ராமநாதபுரம், கமுதி பகுதி சாலைகள் விளைபொருட்களின் உலர்களமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கமுதி பகுதியில் இந்த ஆண்டு நன்றாக மழை பெய்ததால் நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, உளுந்து, மிளகாய் போன்றவை நன்றாக விளைச்சல் காணப்படுகிறது. குதிரைவாலி, கம்பு, சோளம் போன்றவற்றை சாலையின் நடுவே போட்டு பயிரில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். இதனால் கமுதி-சாயல்குடி செல்லும் சாலை சாலையே தெரியாத அளவிற்கு உலர்களமாக மாறி வருகிறது.

இரு சக்கர வாகன ஒட்டிகள், சாலையின் நடுவே செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் செல்கின்றனர். இதனால் நிலை தடுமாறி வயல்வெளியில் கீழே விழும் நிலை உள்ளது. உலர வைக்கும் பணியை சாலையின் நடுவே நின்று கொண்டு இவர்கள் செய்வதால் பஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களால் இவர்களுக்கு ஆபத்து ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: