பெங்களூரு: சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியது தொடர்பான புகாரில் பறிமுதல் செய்த பொருட்கள் ஆய்வுக்காக தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வு அறிக்கை இதுவரை கிடைக்காததால் புகார் மீதான விசாரணையை நடத்த முடியாமல் ஓராண்டுக்கும் மேலாக ஊழல் தடுப்பு போலீசார் தவித்து வருகிறார்கள். கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக இருந்த டி.ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தியபோது, சிறையில் உள்ள சசிகலாவுக்கு விதிமுறைகள் மீறி பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி வரை பணபரிமாற்றம் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். சசிகலாவுக்கு சலுகை வழங்கியதில் சிறை கண்காணிப்பாளராக இருந்த சத்யநாராயண ராவுக்கு தொடர்புள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். டிஐஜி ரூபாவின் இந்த குற்றச்சாட்டு பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.